கன்னியாகுமரி | இரவில் லேசர் ஒளியில் மின்னும் திருவள்ளுவர் சிலை!
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் லேசர் ஒளி விளக்குகளால் அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா வரும் டிச. 30, 31, ஜன. 1 ஆகிய 3 தினங்களிலும் கன்னியாகுமரியில் கொண்டாடப்பட உள்ளன.
அதேபோன்று நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. சுமார் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் டிச. 30-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியுள்ளன. கடல் நடுவே திருவள்ளுவரின் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கின்றன. கன்னியாகுமரி சுற்றுவட்டாரம் முழுவதும் மின்னொளிகளால் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் போன்றவை வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. இவை அங்கே வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.