"வெள்ளையர் கைகளில் இருந்த ஆட்சி கொள்ளையர்கள் கைகளில் சிக்கியுள்ளது" - பிரேமலதா விஜயகாந்த்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் (பழனி சங்கர்) இல்லம் திருமண விழாவில் பங்கேற்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழக வெற்றி கழகம் குறித்த கேள்விகளுக்கு தினமும் பதில் அளித்து எங்களுக்கு சலித்து விட்டது. கடலூர் மாநாட்டில் எங்களுடைய கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம். தேமுதிக அங்கம் வைக்கும் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். தென் மாவட்டங்களுக்கு உள்ளம் தேடி, இல்லம் நாடி கேப்டன் ரதம் விரைவில் வரவுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறோம். வரும் டிசம்பர் மாதம் வரை எங்களுடைய கவனம் அனைத்தும் மக்கள் சந்திப்பிலேயே இருக்கும். ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் எங்களது கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். தமிழகத்தில் நாங்கள் அறிவிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் காவல்நிலையத்தில் விசாரணை மரணம் அதிகமாகி வருகிறது. போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு அந்த நபருக்கு மரணம் ஏற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையிலேயே யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். இனி இதுபோன்ற காவல்நிலைய மரணங்களை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு, தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். தேமுதிகவின் நிலைப்பாடும் இதுதான். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக உள்ளார். இவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அது தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இதுதான் தேமுதிகவின் கருத்து. துணை ஜனாதிபதி தேர்தல் வெற்றியை பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழகம் முழுவதும் கனிமவள கொள்ளைக்கு எதிராக முதலில் குரல் கொடுப்பது தேமுதிக தான் ஆனால் இன்னும் கனரக வாகனங்களில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
தமிழக அரசு தான் இதை தடுக்க வேண்டும். காவல்துறை, நீதி அரசர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழகத்தில் இருக்கின்ற வளங்களை எல்லாம் அழித்து விட்டால் வருங்கால சந்ததி என்ன செய்யும்? இப்படியே போய்க் கொண்டிருந்தால் நாம் நாட்டை விட்டு விட்டு செல்ல வேண்டியது தான். நம் நாட்டில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக நாம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டோம். தியாகிகளும் அதற்காகதான் போராடி சுதந்திரத்தை பெற்று தந்தனர். ஆனால் வெள்ளையர்கள் வெளியேற்றிவிட்டனர். தற்போது கொள்ளையர்கள் கையில் ஆட்சி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.