For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் - சென்னை பல்லவன் பணிமனை முன் பரபரப்பு!

11:27 AM Jan 10, 2024 IST | Web Editor
போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம்   சென்னை பல்லவன் பணிமனை முன் பரபரப்பு
Advertisement

2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில்,  சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. 

நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியதாலும், இன்று (ஜன. 10) பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிமனைகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 அம்ச கோரிக்கைகளில் பொங்கலுக்கு முன்பாக முதற்கட்டமாக அகவிலைப்படி 4 மாத தொகையை வழங்க கோரிக்கை வைக்கின்றனர். 

இந்த நிலையில்,  சென்னை பல்லவன் இல்லத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை இணை ஆணையர் தர்மராஜன் மேற்பார்வையில் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் பல்லவன் இல்லத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி வருகிறார்கள். கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி போராடி வருகின்றனர்.

பல்லவன் சாலையில் மத்திய பணிமனை முன்பு சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு வருவதற்கு வழியின்றி காவல் துறையினர் தடுப்புகள் வைத்திருக்கின்றனர். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அந்த பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. 

Tags :
Advertisement