For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“2032 அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘AI வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு...” - எலான் மஸ்க் கருத்து!

04:41 PM Apr 15, 2024 IST | Web Editor
“2032 அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘ai வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு   ”   எலான் மஸ்க் கருத்து
Advertisement

2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ’செயற்கை நுண்ணறிவு’ சார்பிலான வேட்பாளர் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை மஸ்க் இழந்தார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தான் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றினார். இந்த ஆண்டு வரை அதனை தக்கவும் வைத்துக்கொண்டார். அண்மையில், பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். எலான் மஸ்க் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை இன்றே ஆராய்வதில் ஆர்வம் உடையவர். அதற்கு அவர் வெளியிடும் கணிப்புகள் மற்றும் ஆருடங்கள் உலக அளவில் கவனம் பெறுவதும் வழக்கம்.

அந்த வகையில் 2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ’ஏஐ வேட்பாளர்’ களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நடப்பு 2024-ம் ஆண்டு இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பல்வேறு நாடுகளின் தேர்தலுக்கான ஆண்டாக சிறப்பு பெற்றுள்ளது. அமெரிக்காவின் தேர்தலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டினை எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதனையொட்டி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எலான் மஸ்கிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும்போது 2032-ம் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வேட்பாளராக களமிறங்கவும், வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாகவும் தேர்தல்களில் ஏஐ நுட்பங்களின் தலையீடு குறித்து, ”ஏஐ நுட்பங்கள் மேலும் ஸ்மார்ட்டாக இருப்பின், அவற்றால் ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரிடவும் கூடும். ஏஐ என்பதன் அடுத்தக்கட்டமான ஏஜிஐ(ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இண்டலிஜென்ஸ்) அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மனிதர்களை விட நுட்பமாகவும், ஸ்மார்ட்டாகவும் செயல்படத் தொடங்கிவிடும்” என்றும் அவர் கணித்திருந்தார். அதற்கான பாதையில் தற்போது அவரது நிறுவனங்கள், சாட்ஜிபிடிக்கு போட்டியான ’எக்ஸ்ஏஎஐ க்ராக் 2’ என்பதை பரிசோதித்து வருகின்றன.

பல்வேறு நாடுகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் சூடுபிடித்து வரும் சூழலில், அவற்றில் ஏஐ நுட்பம் வாயிலாக வேண்டாத சக்திகள் குழப்பம் உருவாக்கவும் கூடும் என முன்னதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்த ஏஐ தலையீட்டுக்கு அப்பால், ’தேர்தலில் நேரடி வேட்பாளராகவும் களமிறங்கும் என்றும், போட்டியிட்டு வெல்லவும் வாய்ப்புண்டு’ எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement