“காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” - முருகன் ஆன்மீக மாநாடு தொடர்பான வழக்கில் நீதிபதி கருத்து!
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் முருகன் ஆன்மீக மாநாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. அதில் வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர். அதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று(ஜூன்.06) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், “முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெறுவதற்கு 10 நாள் முன்னதாக, மாநாடு நடைபெறும் வளாகத்தில் முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள்
அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினால், அருகில் உள்ள குடியிருப்புகள்
பாதிக்கப்படும். அந்த மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு தற்போது
வரை நிலுவையில் உள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனுவில் சில கேள்விகள் கேட்டு உள்ளோம். ஆனால், இதுவரை மாநாட்டுக்கு அனுமதி கேட்டவர்கள் பதில் அளிக்க வில்லை. இது குறித்து 9 ம் தேதிதான் முடிவு எடுக்க உள்ளோம். எனவே இந்த அரங்கு அமைப்பதற்கு அனுமதி மறுத்து உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில்,
“அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைத்து காலை, மாலை 2 மணி நேரம் வழிபாடு நடத்த உள்ளோம். எனவே அனுமதி வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, “இதே பகுதியில் பிற மாநாடுகள் நடைபெற்று உள்ளது. அதற்கு அனுமதி வழங்க பட்டு உள்ளது. தற்போது மறுப்பது ஏன்?அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்த அனுமதி மறுத்து நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல. ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா? குடிமகன்களுக்கு உரிமை உள்ளதா? காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்பட கூடாது” என்று கூறி இது குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 9 ம் தேதி ஒத்தி வைத்தார்.