காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பதிவிட்ட புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்...
நிலக்கரி கொண்டு செல்லும் இளைஞர்களின் புகைப்படங்களை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நடைபயணம் பிப்.01-ம் தேதி மேற்கு வங்கத்தை அடைந்தது. இதனைத் தொடர்ந்து பீகாரை கடந்து ஜார்க்கண்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்த ஜார்க்கண்ட் மாநில எல்லையில் இருந்து ராஞ்சி நோக்கி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட போது, நிலக்கரி சுமை ஏற்றிய மிதிவண்டிகளுடன் சென்ற இளைஞர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதையும் படியுங்கள்: “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” – அமைச்சர் சேகர்பாபு
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அந்த இளைஞர்களின் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாது:
"நாள்தோறும் 200 கிலோ எடையுள்ள நிலக்கரியை மிதிவண்டிகளில் சுமந்து கொண்டு 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த இளைஞர்களின் வருமானம் பெயரளவுக்கு தான் உள்ளது. அவர்களுடன் நடக்காமல், அவர்களின் சுமையை உணராமல் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது. இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் கட்டமைப்புச் சக்கரம் நின்றுவிடும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.