“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு மாற அதிமுக ஆட்சி அமைவதுதான் ஒரே வழி” - இபிஎஸ் பதிவு!
பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தூத்துக்குடியில் பள்ளி மாணவி சமையல் பணியாளரால் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும், தர்மபுரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
திமுக ஆட்சியில், பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்திற்கும் கடும் கண்டத்திற்கும் உரியது. அதிலும், வேலியே பயிரை மேய்ந்தாற்போல், மாணவிகள் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல்துறையிலேயே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.
நான் எதற்கு "SayYesToWomenSafety&AIADMK" என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன் என்பதை இன்றைய செய்திகளே தெளிவாக்கிவிட்டன. இந்த ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே, தமிழ்நாடு மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி! மேற்குறிப்பிட்டுள்ள பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.