For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நாடு முழுக்க தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை!” வெளியான அதிர்ச்சித் தகவல்!

01:34 PM Jun 27, 2024 IST | Web Editor
“நாடு முழுக்க தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை ” வெளியான அதிர்ச்சித் தகவல்
Advertisement

நாடு முழுவதும் 2 டஜனுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. 

Advertisement

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதனை 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.  ஜூன் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாள்கள் முன்னதாக, அதுவும் நாடே மக்களவைத் தேர்தல் முடிவுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.  இதுவே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து ஏராளமான புகார்கள் வெளியாகி,  நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மையையே உலுக்கிவிட்டது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முதல் தகவல் அறிக்கையின்படி,  மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் சில மாநிலங்களில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.  இது தொடர்பாக சிபிஐ குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.  சிபிஐ விசாரணைக் குழுக்கள் பிகாரின் பாட்னா,  குஜராத் மாநிலம் கோத்ரா உள்ளிட்டப் பகுதிகளுக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் அஜய் குமார்,  25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லாத தேசிய தேர்வு முகமை,  ஆண்டுக்கு இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.  ஒடிசா,  தமிழ்நாடு,  புதுச்சேரி மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார்,  இதுபோன்ற தேர்வுகளை தேசிய தேர்வு முகமையை நடத்தச் சொல்லி,  மத்திய அரசு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

தேசிய தேர்வு முகமை,  பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு செயல்படுகிறது.  உள்துறையில் பணியாற்ற நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் இன்மை,  வினாத்தாள் வடிவமைப்பு,  வினாத்தாள் விநியோகம்,  தேர்வு மைய பாதுகாப்பு உள்ளிட்டப் பணிகளை வெளி ஒப்பந்தத்துக்கு விடுவதன் மூலமே நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது போல இருக்கிறது தேசிய தேர்வு முகமையின் நடவடிக்கைகள் என்றும் குற்றம்சாட்டினார்.

Tags :
Advertisement