“செல்லமாக வழங்கப்பட்ட பிரம்படி..” - முன்னாள் ஆசிரியர் மாணவர்கள் சந்திப்பில் நடந்த சுவாரசியம்!
மதுரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஆசிரியர் மாணவர்களை செல்லமாக
பிரம்பால் அடித்தும், காதுகளை பிடித்து தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை
வழங்கிய காட்சி சுவாரசியமாக அமைந்தது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் ஆர்சி உயர்நிலைபள்ளியில் 1989 முதல் 1996 வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகள் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 27 ஆண்டுகாலம் கழித்து ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியரின் கன்னத்தைக் கிள்ளியும், கட்டி அணைத்தும், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். பள்ளிக்கூடத்தில் இருந்து ஆசிரியர்களை மலர் தூவி வரவேற்று அருகே உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பின்பு ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், வெள்ளி பதக்கம் வழங்கியும் கௌரிவித்தனர். மேலும் முன்னாள் தலைமை ஆசிரியர் காளிமுத்து கணக்கு பாடம் நடத்துவது போல் நடத்தி, முன்னாள் மாணவர்களிடம் கேள்வி கேட்டார். தவறான பதில் சொன்னவர்களை மேடைக்கு வரவழைத்து பிரம்பால் செல்லமாக அடித்தும், ஒருவருக்கொருவர் குட்டு வைக்க சொல்லியும், காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட சொல்லியும் செல்லமாக தண்டனை வழங்கினார்.
மேலும் ஆசிரியர்களிடம் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்ப வாழ்க்கை, தொழில், வேலை நிலவரங்களை பற்றி பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படிக்கும்போது நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தி பேசி பகிர்ந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது.