பட்டியலின பெண் சடலமாக மீட்பு - பதவியை ராஜிநாமா செய்வதாக கதறி அழும் எம்பி!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பகுதியில் 22 வயது பட்டியலினப் பெண் ஒருவர், கடந்த ஜனவரி 30ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உடல் அடுத்த நாள் ஆடையின்றி சடலமாக கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், தங்களது மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைகள் மற்றும் கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் பல ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் மகளை காணவில்லை என புகார் அளித்தும் காவல்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரேத பரிசோதனை முடிவுகள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பைசாபாத் தொகுதி எம்பி அவதேஷ் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அவர் பேசியதாவது, “என்னை மக்களவைக்கு செல்ல விடுங்கள். இந்த விஷயத்தை (பிரதமர்) மோடியின் முன் வைப்பேன், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வேன். வரலாறு என்ன சொல்லும்? பெண் குழந்தைக்கு எப்படி இது நடந்தது?. கடவுள் ராமர் எங்கே?, சீதா அம்மா எங்கே?. என அழுதவாறே பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.