டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் - மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 23 ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால், அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டிருந்தனர்.
முன்னதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வெறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்றம் முதலில் முடிவு செய்யட்டும் என்று கருத்து தெரிவித்தது. இதையடுத்து மனுவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, தமிநாடு அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.