For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமரின் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் : பெற்றோர்கள் ஏதும் புகார் அளித்தார்களா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

08:25 PM Apr 04, 2024 IST | Web Editor
பிரதமரின் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம்   பெற்றோர்கள் ஏதும் புகார் அளித்தார்களா    சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Advertisement

பிரதமரின் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட விவகாரத்தில் பெற்றோர்கள் ஏதும் புகார் அளித்தார்களா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Advertisement

பாஜக சார்பில் கோவையில் மார்ச் 18 நடைபெற்ற வாகனப் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து கையசைத்து சென்றார்.

பிரதமர் மோடியின் பேரணி வாகனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் இருந்தனர். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த பேரணி, ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்த பின், அங்கு 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடிஅஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.  அந்த வகையில், சிறுவர்களுக்கு ராமன், சீதை மற்றும் ஹனுமன் வேடமணிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது, சில சிறுவர்கள் மோடியின் முக உருவம் கொண்ட முகமூடிகளையும் கையில் வைத்திருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியை வரவேற்க அரசுப் பள்ளி மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகின. தேர்தல் தொடர்பான பரப்புரை, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. இதனை மீறிய பாஜகவிற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை புகழ் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கின் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றதாகவும், அதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் ? தலைமை ஆசிரியை தரப்பில் வாதங்களை முன்வைத்தார்

பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர் என  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அரசு நிகழ்ச்சியில் பிரதமர் என்ற முறையில் மோடி கலந்து கொண்டிருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தவறு என்றும் காவல்துறை வாதங்களை முன்வைத்தது.

பிரதமர் மோடியின் கோவை பிரச்சார நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக பெற்றோர் ஏதும் புகார் அளித்தார்களா? பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்கள் யாரும் இருந்தார்களா? சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் ? என காவல் துறை விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 8 ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
Advertisement