For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸாவின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்!

10:03 AM Apr 09, 2024 IST | Web Editor
காஸாவின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்
Advertisement

காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. இந்த சம்பவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று கூறப்படுகிறது.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் 25000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளது. இருந்தாலும், போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருக்குலைந்த நகருக்கு திரும்பும் மக்கள்

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாவது,

“கான் யூனிஸ் நகரை கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றிய இஸ்ரேல் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இருந்தாலும், காஸா பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இஸ்ரேல் வீரர்கள் தொடர்ந்து இருப்பார்கள். அதில் கான் யூனிஸ் நகரமும் அடங்கும். ஹமாஸ் அமைப்பினர் கடைசியாக பதுங்கியுள்ள ராஃபா நகருக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முன்னேற்பாடாகவே கான் யூனிஸிலிருந்து ராணுவ வீரர்கள் வெளியேறி வேறு பகுதிகளில் குழுமி வருகின்றனர்” என்று அதிகாரிகள் கூறினர்.

ராஃபா நகர் மீது படையெடுக்கப்போவதாக இஸ்ரேல் பல வாரங்களாகவே கூறிவருகிறது. இருந்தாலும், பிற பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவத்தால் உத்தரவிடப்பட்ட பாலஸ்தீனர்கள், கடைசியாக அந்த நகரில்தான் தஞ்சமடைந்துள்ளனர். பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேலால் முன்னர் அறிவிக்கப்பட்ட ராஃபாவில்தான் காஸா மக்கள்தொகையில் 50% பேர் (சுமார் 14 லட்சம் பேர்) தற்போது வசித்துவருகின்றனர்.

கான் யூனிஸில் இருந்து இஸ்ரேல் படையினா் வெளியேறியத்தைத் தொடா்ந்து, தாக்குதலில் உருக்குலைந்த அந்த நகருக்கு திரும்பிவந்த பாலஸ்தீனா்கள்.

இந்த சூழலில், ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் படையெடுத்தால் மிகப்பெரிய உயிர்ச் சேதம் ஏற்படும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துவருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ராஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடாது என்று இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ராஃபா நகரப் படையெடுப்புக்கு முன்னேற்படாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து இஸ்ரேல் படையினர் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக நடந்துவரும் போரில் இஸ்ரேல் படை வெளியேற்றம் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று கூறப்படுகிறது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (ஏப். 8) வெளியிட்ட அறிக்கையில், “காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் 184 நாள்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,207-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 75,933 போ் காயமடைந்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement