நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு!
நித்தியானந்தா தியான பீடம், அதன் அறங்காவலர் சந்திரசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
ராஜபாளையம் சேத்தூர் மற்றும் கோதைநாச்சியார்புரம் கிராமத்தில், மருத்துவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதன் அடிப்படையில் ராஜபாளையம் டிஎஸ்பி சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நித்தியானந்தா ஆசிரமரத்தில் உள்ள சிஷ்யைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, யாரையும் வெளியேற்ற கூடாது. எனவே, கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இல்லை. எனவே நித்தியானந்தா தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் நித்தியானந்தாவுக்கும், நித்தியானந்தா மடம் தொடர்பான சொத்துகளுக்கும் தொடர்பு இல்லை எனக்கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனக்கூறி, நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு குறித்து, ராஜபாளையம் டிஎஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் கால அவகாசம் கோரினர். இதைத்தொடர்ந்து நீதிபதி, நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை, சீடர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், ராஜபாளையம் டிஎஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.