மழையின் தாக்கம் குறைந்தது - நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.!
மழையின் தாக்கம் குறைந்ததுள்ளதால் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
![](https://news7tamil.live/wp-content/uploads/2023/12/postcard-21-5.webp)
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகர் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மழையின் தாக்கம் சற்று குறைந்தது. தாமிரபரணி நதியில் நீர்வரத்து சற்று குறைந்ததால் காலை போல் அல்லாமல் நீர்போக்கு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தீயணைப்பு துறையினரும் முகாமிட்டுள்ளனர்.
மின்சாரத்தை பொறுத்தவரை, பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி மற்றும் வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வணிக கடைகளை பொறுத்தவரை பாளை பேருந்து நிலையம், முருகன் குறிச்சி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் இதர கடைகள் அனைத்தும் இயங்குகின்றன. மார்க்கெட் பகுதியில் மக்கள் சகஜமாக கடைகளில் பொருட்களை வாங்குதை காண முடிகிறது.
பேருந்து போக்குவரத்தை பொறுத்தவரை, நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மற்றும் மாநகர் பகுதிகளில் வண்ணாரப்பேட்டை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிராமப் பகுதிகளுக்கு இயக்கக்கூடிய பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாநகரின் ஒரு சில இடங்களில் இயல்புநிலை திரும்பியுள்ளது. பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மட்டும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முகப்பு சாலையில் சென்ற தண்ணீர் முற்றிலும் குறைந்து விட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையில் மழைநீர் தேங்கிய பல்வேறு பகுதிகளில் நீர் வடிய தொடங்கியது.