"மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி அருகே கருமந்துறையை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லர் வேலை செய்து வந்த இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்கிரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்த சூழலில், கடந்த ஆண்டு உயிரிழந்தார். மகன் ஸ்ரீகணேஷ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தந்தையின் தொழிலான டெய்லரின் வேலையை செய்து வருகிறார். இவர்களின் தந்தை ஆண்டி கடந்த ஆண்டு புற்றுநோயால் காலமானார்.
இந்த தம்பதியின் 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களும் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பிய ராஜேஸ்வரி, பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து ஜே.இ.இ. நுழைவு தேர்வை எழுதினார். இதில் ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து, ராஜேஸ்வரிக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் சேர இடம் கிடைத்தது. இதன் மூலம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இந்த நிலையில், மாணவி ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்! அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திமுக அரசு தொடர்ந்து உழைக்கும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.