“தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% வரித்தொகையை அரசே ஏற்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆதிதிராவிட பழங்குடியினர் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியினை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும், தற்போது உள்ள நிதியினை வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை; அதிலும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தி தர வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியினை பொறுத்தவரையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு தொகுதிக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இதில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் போது அதற்காக ஜிஎஸ்டி தொகை 18 சதவீதம் செலுத்த வேண்டி உள்ளதால், அந்த நிதியில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில் இனி அந்த ஜிஎஸ்டி தொகையினை தமிழக அரசே ஏற்கும்” என முதலமைச்சர் தெரிவித்தார்.