”நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்”- ராமதாஸ் அறிவிப்பு!
பாட்டாள் மக்கள் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்பு மணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ராமதாசும், அன்புமணியும் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறனர். சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். பதிலுக்கு ராமதாசும் சிறப்பு பொதுக்குழுவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்ட உள்ளதாகவும், அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதன் காரணமாக ராமதாசும், அன்புமணியும் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசின் மனைவியும் அன்புமணியின் தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாள் நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது ராமதாசும் உடன் இருந்தார். அங்கு தனது மனைவி சவுமியா மற்றும் மகள்களுடன் கலந்து கொண்ட அன்புமணி, தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.