"காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரும்பாலான பொதுமக்கள், திமுக கூட்டணி தொண்டர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். கடந்த ஓராண்டாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்கள், நம் அனைவரின் மனதையும் உலுக்குகிறது. உணவுப் பொருள் ஏற்றி வந்த லாரிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. அது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறித்த இந்த கொடூரத்தை பார்த்து, என் இதயத்தையும் நொறுங்கியது.
இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா? காசா இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும். இந்த தாக்குதல்களை, மனிதநேய சிந்தனை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும். வரும் 14ஆம் தேதி காசாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.