”அம்பானிக்கும், அதானிக்குமானது தான் பாஜக ஆட்சி” - கனிமொழி எம்.பி விமர்சனம்!
அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, கோவை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
துடியலூா் சந்தை பகுதியில் காலை 9 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அவா், காலை 10 மணிக்கு சிங்காநல்லூா் கரும்புக்கடை மைதானத்திலும், காலை 11 மணிக்கு சூலூா் கலங்கல் சாலை சந்திப்புப் பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பொய் சொல்வதற்காகவே கட்சி நடத்துகிறது பாஜக. யாரும் நிம்மதியாக வாழக்கூடாது என்று மதத்தால் பிரிக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. தன்னுடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன தவறுகள் செய்தாலும் அவர்களைப் பாதுகாப்பார்கள். ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்கிறது.
ஐடி சோதனை விட்டு அதற்குப் பிறகு தேர்தல் பத்திரம் வாங்குகிறார்கள். யார் எதிர்த்துப் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு போடுவார்கள். இந்த தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது. அப்படி ஒரு விபத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது தான் நமக்கு கடைசி தேர்தல்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள் குளறுபடிகள் தீர்க்கப்படும். அம்பானி வீட்டு கல்யாணத்துற்கு ராணுவ பாதுகாப்பு தேவைக்காக இருந்த விமான நிலையத்தை பன்னாட்டுச் சர்வதேச விமான நிலையமாக மாற்றி அம்பானி அவர்களுக்குப் பரிசாக அளித்துள்ளார் மோடி. அம்பானிக்கும் ,அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி.
விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நாங்கள் முயற்சி எடுத்து இடம் ஒதுக்கினால். நீங்கள் அதானிக்கும், அம்பானிக்கும் விமான நிலையத்தை ஒப்படைத்துவிடுகிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரகூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.