15 நிமிடங்களாக நிற்க வைத்தே குறைகளை கேட்ட துணை வட்டாட்சியர்...விவசாயிகள் வேதனை...
"விவசாயிகள் மட்டும் கால் வலிக்க நிக்கணும்... அதிகாரின்னா உக்காந்துட்டே தான் பேசுவாரா கால் மணி நேரத்திற்கும் மேலாக விவசாயிகளை நிற்க வைத்து ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டே பேசிய துணை வட்டாட்சியரால் விவசாயிகளின் வேதனை அடைந்தனர்.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி, விளைநிலங்களும் முற்றிலும் சேதமடைந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் இடையூறும் வட்டத்துக்குட்பட்ட மானாவாரி விவசாய விளை நிலங்களில் பயிரிடபட்டிருந்த உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு, மிளகாய், சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, பல கிராமங்களில் ஏற்பட்ட கண்மாய் உடைப்பால் சாலைகள்
துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதுக்கப்பட்டுள்ளது. இதனால், எட்டையபுரம்
பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் 50க்கும்
மேற்பட்டோர் மாவட்டச் செயலாளர் ஆத்திராஜ் தலைமையில் எட்டயாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விவசாய பாதிப்புகளுக்கான நிவாரண தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழையினால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக
சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளிக்க சென்றுள்ளனர்.
அலுவலகத்தில் வட்டாட்சியர் இல்லாத காரணத்தினால், விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமாரிடம் அளிக்க சென்றுள்ளனர். அப்போது, துணை வட்டாட்சியர் செல்வகுமார் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டே, விவசாயிகள் அழுகிய பாதிப்படைந்த செடிகளை காட்டுவதற்காக எடுத்து வந்த உளுந்து பயிர்களை எடுத்து வாயில் போட்டு மென்றதாகவும், விவசாயிகள் கூறுவதை கேட்காமல் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
மனு அளிக்க வந்திருந்த அனைத்து விவசாயிகளையும் கால்மணி நேரமாக நிற்க வைத்தே பேசிக் கொண்டு, துணை வட்டாட்சியர் மட்டும் உட்கார்ந்து கொண்டு பேசியது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.