நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு!
நாடு முழுவதும் நீட் தேர்வின் மூலம் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ,கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 11) முடிவடைகிறது. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.