”நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காண தகுதி தேர்வாக உள்ள நீட் தேர்வின் அண்மைய முடிவுகள் தேர்தல் முடிவுகள் வெளியானது. நிகழாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4 வெளி வந்தது. நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இந்த தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றியும் நீட் தேர்வு பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளி வரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம; நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை, சமூகநீதிக்கு எதிரானவை, தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.
NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம், நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில்…
— M.K.Stalin (@mkstalin) June 7, 2024