புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே.7-ல் தொடக்கம்!
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி காலமானார். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் மறைந்த நிலையில், புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7ஆம் தேதி தொடங்கும் என்று ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
திங்களன்று ரோமில் 180க்கும் மேற்பட்ட கார்டினல்கள் பங்கேற்ற ஐந்தாவது முறைசாரா கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது. இந்த மாநாடு வாடிகனின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும். மாநாடு நடைபெறும் நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.