For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்.. இல்லையெனில்.." - விஜய் ஆவேசம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரந்தூர் மக்களை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் மக்களுடன் தான் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
05:00 PM Jul 04, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரந்தூர் மக்களை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் மக்களுடன் தான் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
 பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்   இல்லையெனில்      விஜய் ஆவேசம்
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள், நிலங்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே அப்பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அதில் தவெக தலைவர் கூறியிருப்பதாவது,

"பரந்தூர் பகுதியில், விவசாய நிலங்களை அழித்துவிட்டுப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும் விவசாயிகளும் ஏகனாபுரம் கிராமத்தில் வருடக்கணக்காகப் போராடி வருகின்றனர். போராடும் மக்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நான் சந்தித்த மறுநாளே, பரந்தூர் பகுதி 'மக்கள் பாதிக்காத வண்ணம்' விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பாக ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், 'மக்கள் பாதிக்காத வண்ணம்' என்றால், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வரவே வராது என்றோ அல்லது யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றோ எத்தகைய சரியான விளக்கமும் அளிக்கப்படவே இல்லை.

மாறாக, பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே' வசிப்பதால் அங்கு விமான நிலையம் அமைந்தால் பெரிய பாதிப்பு இருக்காது என்ற அர்த்தம் தொனிக்கும் ஒரு காரணமும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. 1005 குடும்பங்கள் மட்டுமின்றி, இப்புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிப்புக்கு ஆளாகும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேரும் நமது மக்கள் தானே என்கிற அக்கறையும் மனிதாபிமானமும் அற்றதாகவே அந்த அறிக்கை இருந்தது.

மேலும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வந்த நிலையில், பரந்தூர் பகுதியைத் தெரிவு செய்து பரிந்துரைத்ததே தமிழ்நாடு அரசுதான் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் 27.02.2025 அன்று அளித்த பேட்டியில் வெளிப்படையாக அறிவித்தார். இது மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயப் பெருங்குடி மக்களின் வீடுகளை, விவசாய நிலங்களை, வாழ்வாதாரங்களை மற்றும் அப்பகுதிகளில் இருக்கும் இயற்கை நீர்நிலைகளை அழித்து, அதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பையும் விளைவித்து, அங்குப் புதிய விமான நிலையம் அமைத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் யாரால், எதற்காக? மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட முதலமைச்சராக, போராட்டக் களத்தில் இருக்கும் மக்களின் பிரதிநிதிகளைத் தாங்கள் இதுவரை நேரில் சந்திக்காதது ஏன்? இது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையிலும், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பே இருந்தது. இது பரந்தூர் பகுதி மக்களுக்கு எதிரான அறிவிப்பே ஆகும். இந்த அறிவிப்பு, நிதி அமைச்சரின் தனிப்பட்ட முடிவால் வந்த அறிவிப்பா அல்லது தங்கள் அனுமதிக்குப் பிறகான அறிவிப்பா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை. பட்ஜெட்டுக்கு முன்பே, தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் கண்ணீர் மல்க, 03.03.2025 தேதியிட்ட ஒரு கோரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

அது தங்களின் பார்வைக்கு வந்ததா என்பது தெரியவில்லை. ஒருவேளை, தங்கள் பார்வைக்கு வந்தும், அது குறித்த எந்த ஒரு கனிவான அணுகுமுறையும் தங்களிடம் இருந்து வெளிப்படவில்லை. இப்படியான சூழலில், பரந்தூர் விமான நிலையத் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணியைத் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) விரைவில் செய்யப் போகிறது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பான முடிவுகளும் அறிவிப்புகளும் உங்களுக்குத் தெரிந்துதான் எடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் இப்போது இன்னும் வலுவடைவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒருவேளை, உங்களுக்குத் தெரிந்துதான் நடக்கிறது எனில், உங்களின் மக்கள் நலன் சார்ந்த சிந்தனை குறித்துக் கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. விமான நிலையம் என்ற பெயரில் மட்டுமே 20 கிராமங்களுக்கு உட்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. பின், அதைச் சுற்றித் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் எனக் கட்டடங்கள் கட்டப்படும். அதற்காக. அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள மேலும் 20 கிராமங்கள் அழிக்கப்படும் என்ற அச்சம் அந்த மக்களிடம் இருக்கிறதே. அதற்கு உங்கள் பதில் என்ன? இது, பரந்தூர் பகுதி மக்கள் மீது ஏவப்பட்டுள்ள நிர்வாக ரீதியான அரச பயங்கரவாதம் அல்லாமல் வேறென்ன?

விவசாயிகளின் உயிர்நாடியான, காலம் காலமாக அவர்களின் அடையாளமாக இருக்கும் பூர்வீக நிலங்களைப் பறித்து அழித்துவிட்டு, அதற்குப் பதிலாக மாற்று இடத்தை அரசு தருவதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை, அப்படித் தருவதாகச் சொல்லும் மாற்று இடமோ, விவசாயம் உட்பட எவ்வித வாழ்வாதாரத்திற்கும் உதவாத வெற்று இடமாக இருந்தால் நம் விவசாயிகளின் நிலை என்னாவது?
சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள் இன்னும் முடியாத நிலையில், அவசர அவசரமாக நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய அவசியமென்ன? ஏதேனும் ஒரு துறையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்தாலும் விமான நிலையம் அமைவது சந்தேகம் எனும்போது, எந்த நம்பிக்கையில் மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை வெளியிடுகிறது?

கையகப்படுத்தப் போகும் நிலங்களில் 26.54 சதவீத நிலம் wetlands எனப்படும் நீர் தேங்கும் பகுதிகளாகும். இந்த நீர் வழித்தடங்கள் அழிக்கப்பட்டால், சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பது அரசுக்குத் தெரியுமா? கம்பன் கால்வாய், ஏகனாபுரம் ஓடை, நெல்வாய் ஏரி என ஏராளமான நீர்நிலைகள் உள்ள நிலப்பகுதி இது. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பது அரசின் சிந்தனைக்கு ஏன் வரவில்லை?
பரந்தூர் விமான நிலையப் பகுதிகளின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையைத் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட மறுப்பது ஏன்? அது இத்திட்டத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது.

இவை அனைத்தும் பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அண்மையில் என்னைச் சந்தித்த போது மன வேதனையுடன் பகிர்ந்ததைக் கொண்டு நான் எழுப்பும் வினாக்கள். இத்தகைய வேதனைகள் தொடரும்போது, தற்போது பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த, கடந்த 25.06.2025 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைவதை ஏற்காமல் வருடக்கணக்காகப் போராடும் மக்களின் நிலங்களையும் சேர்த்தே கையகப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களின் கண்களில் குத்துவதாகவே இந்த அரசாணை உள்ளது. இவ்வளவு தூரம் வந்துவிட்ட நிலையிலும், இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. தங்களுக்கு உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த அக்கறை இருக்கிறது எனில், பரந்தூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களைக் கண்துடைப்புக்காக அதிகாரிகளையோ அல்லது அமைச்சர்களையோ வைத்துச் சந்திக்கச் செய்யாமல், 'தாங்களே நேரில்' சந்தித்து, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அவர்களுக்கு உடனடியாகத் தாங்கள் அளிக்கலாம்.

ஆனால், அதற்கு மாறாக, எதிர்க் கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு என்று எதுவுமே செய்யாமல் பரந்தூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படும் பட்சத்தில், எம் மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியது தமிழக வெற்றிக் கழகத்தின் கடமை என்பதால், நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக்கொண்டு வந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும். அது மட்டுமல்லாமல் பரந்தூர் பகுதி மக்களின் நலனுக்காக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய சூழலும் எழும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement