பிப்.23-ல் சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
வரும் 23ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டது. இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந்தேதி சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகிறார்.