“மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” - வைரமுத்து!
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திரன் பேசியது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு பாடலாசிரியர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,
“ஹிந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை. இன்னொரு தேசிய இனத்தின்மீது திணிக்கப்படும்போது அது புல்லுருவிபோல் உள்ளிருந்து தாய்மொழியின் உயிரை உறிஞ்சிவிடும். இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்திபோன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான். தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது, ஏற்றுக்கொள்ள முடியாது; தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டோடு தமிழர்கள் கெட்டியாக ஒட்டி நிற்கிறார்கள், அறிஞர் அண்ணாவும் உடன் இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.