“மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்” - தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!
தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்தது. இதில் தெலங்கானா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட 7 மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்தனர். இது குறித்து விவரிக்க முன்னதாக பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் ஒதுக்க கோரி கடிதம் எழுதினார். இதனிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.கள் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் இது தொடர்பான பேச்சுகள் குறையத் தொடங்கின.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டதோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவரின் எக்ஸ் பதிவில், “2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜக-வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.