#Tirupati தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற மத்திய அரசு!
மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 8ம் தேதி இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டனர். அப்போது, விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியது.
அதிகமாக கூட்டம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், பலர் படுகாயம், லட்டு கவுண்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தது.
மேலும் இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் திருப்பதிக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திடீரென மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. தங்களுடைய முடிவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.