For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

05:06 PM Jan 10, 2024 IST | Web Editor
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு  உயர் நீதிமன்றம் கூறியது என்ன
Advertisement

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.  நீதிமன்றம் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Advertisement

ஊதிய உயர்வு,  பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து,  நேற்று முதல் (ஜனவரி 9)  அண்ணா தொழிற்சங்கம்,  சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,  8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்,  பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  பொது மக்களின்  போக்குவரத்திற்கும்,  பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சுமூகமாக செயல்படுவதை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,  பொங்கல் பண்டிகையின்போது வேலைநிறுத்தப் போராட்டம் தேவையா? பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் நகர்புற மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும்,  கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  போராட்டம் நடத்த உரிமை இல்லை எனக் கூறவில்லை,  பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

போராட்டத்தை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைப்பது குறித்து தொழிற்சங்கத்தினரும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசுத் தரப்பும் பதிலளிக்கக் கோரி பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை அடுத்து வழக்கு மீண்டும் மதிய நேரத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்த வழக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.  பொங்கல் காலங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட கூடாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தமிழக அரசு மிகபெரிய நிதி நெருக்கடியில் உள்ளது.  பொருளாதார நெருக்கடி காரணமாகவே தற்போது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.  7000 தொழிலாளர்களின் நலனை விட தற்போது பொதுமக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது.  நேற்று அமைதியாக நடந்த வேலைநிறுத்த போராட்டம் தற்போது வன்முறையை நோக்கி சென்று கொண்டுள்ளது. இவ்வாறு வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஜனவரி 19 வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்தன.

Tags :
Advertisement