திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
விழுப்புரத்தில் மின்மோட்டாரை பயன்படுத்தும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தேவேந்திரனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரம் பெலாகுப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்த செல்வன் தேவேந்திரன் (வயது 9) த/பெ. மாரி என்பவர் கடந்த பிப். 23-ம் தேதி மாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின்மோட்டாரைப் பயன்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து, உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.