"இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக" - எடப்பாடி பழனிசாமி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் மாவட்டத்தில் உள்ள பூக்கள்,காய்கறி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசியவர், "6000 ஏரிகள் அதிமுக ஆட்சியில் தூர்வாரி, விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டதால், நல்ல விளைச்சல் கிடைத்தது.
ஏரி ஆழப்படுத்தி தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது தடைப்பட்டிருப்பதால், மீண்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீட்டை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் பயிர் சேதத்திற்கு போதிய இழப்பீடு வழங்கப்படும்.
யானைகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு சட்டமன்றத்தில் கேபி முனுசாமி பேசினார். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அதிமுக ஆட்சியில் அகழிகள், மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யானைகள் தாக்கி உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீடு தற்போது 10 லட்சம் வழங்கப்படும் நிலையில் அதிமுக ஆட்சியில் அதிகரித்து வழங்கப்படும். மா விவசாயிகள் கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தியது. ஏக்கருக்கு 30,000 இழப்பீடு கேட்டோம், மா கூழ் தொழிற்சாலை கோரிக்கை அதிமுக ஆட்சியில் பரிசீலிக்கப்படும். ஒசூர் பகுதியில் மலர் விவசாயிகளுக்கு 2011- 21 ல் பசுமை குடில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். மலருக்கு ஏக்கருக்கு 1.88 லட்சம் மானியம் வழங்கினோம்.
திமுக ஆட்சியில் மானியம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் எழுகிறது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வழங்குவோம். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சர்வதேச மலர் ஏல மையம் செயல்படுத்தாமல் உள்ளது திமுக அரசு. தமிழ்நாட்டில் களப்பிண பசுக்களை வழங்கிட பிரம்மாண்ட கால்நடை பராமரிப்பு தொடங்கினோம். களப்பின பசுக்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கி தினந்தோறும் 40 லிட்டர் பால் கொடுக்கும் வகையில் முயற்சித்து இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
பால் உற்பத்தி பெருக்கவும், விலை உயர்த்தவும் அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக அரசு. நானும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்தில் ஈடுபாடு அதிகமாக கொண்டுள்ளேன். விவசாயிகளுக்கான உதவியை வழங்குவது தான் அதிமுகவின் பிரதான திட்டம். விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கைஎள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.