கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் தவெக தலைவர் #Vijay!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : “யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், "இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம்... வெற்றி நிச்சயம்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்துவைத்தார்.