பாதுகாப்பான பயணத்திற்கு நன்றி...7வது ஆண்டாக அரசுப் பேருந்துக்கு கிடா வெட்டி மக்கள் வழிபாடு!
சத்தியமங்கலம் அருகே பாதுகாப்பான பயணத்திற்கு நன்றி தெரிவிக்க, அரசு
பேருந்துக்கு மூன்று ஆடுகள் வெட்டி, பலியிட்டு பயணிகள் வழிபாடு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து பணிமனையில் இருந்து தினமும் காலை 6:40
மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தேனி வரை செல்லும் அரசு
பேருந்தானது பண்ணாரி, ராஜன்நகர், பசுவபாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர்,
பனையம்பள்ளி ஆகிய கிராமங்கள் வழியாக புளியம்பட்டி சென்றடைகிறது.
அங்கிருந்து திருப்பூர் சென்று திண்டுக்கல் வழியாக தேனி சென்றடைகிறது. இவ்வழிப் பேருந்தில் மேற்கண்ட கிராமங்களில் இருந்து சுமார் 56 பயணிகள் தினசரியாக கடந்த 15 ஆண்டுகளாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்தின் மூலம் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
தினமும் சரியான நேரத்திற்கு பேருந்து வருவதாலும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான பயணம் அமைவதாலும் இந்த பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும், கடந்த ஆறு வருடங்களாக ஆடி மாதம் கிடாய் வெட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடமும் பேருந்துக்கு மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி, டயர்களுக்கு சந்தனமிட்டு, உள்பகுதியில் பலூன்களை கட்டியும், பேருந்து முன்பு பூஜை நடத்தி இன்று காலை அரசு பேருந்துக்கு ஆடு வெட்டினர்.
பெண்கள் பொங்கல் வைத்து, சாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். கிடாய் வெட்டி அங்குள்ள ஏழைகளுக்கு விருந்து
படைத்தனர்.