"டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி" - #Annamalai பேட்டி
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேற்று (ஜன.22) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்து பேசினர். அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அமைச்சரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை மகிழ்ச்சியான தகவல் வரும்” என்றார். இந்த நிலையில், அரிட்டாப்பட்டி பல்லியிர் பாதுகாப்பு மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுரங்க திட்டம் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. அப்பகுதி கிராம மக்கள் மன நிம்மதி இல்லாமல் இருந்தனர். இன்று இரவு அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள். டங்ஸ்டன் சுரங்கம் நாட்டிற்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட, விவசாயப் பகுதி பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததால் இந்தியாவின் எல்லையையும், மீனவர்களின் எல்லையையும் சுருக்கிவிட்டோம். கச்சத்தீவைக் கொடுத்ததால் நாட்டிற்கு என்ன கிடைத்தது? மக்கள் கேட்டு பிரதமர் செய்தது ஜனநாயகத்தின் வெற்றி. நாங்கள் பெரியாரின் கொள்கையை ஏற்கவில்லை, அதை கண்டு கொள்ளவும் இல்லை.
பெரியாரை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்ப வில்லை. அதை தாண்டி சென்று விட்டோம். கச்சத்தீவு உரிமை நிலைநாட்ட பிரதமர் உறுதுணையாக நிற்பார். நயினார் நாகேந்திரன் கருத்து அவருடைய பாணியில் சொல்லி உள்ளார். அதை தவறாக புரிந்துக் கொண்டு உள்ளார்கள். 2026 ஆண்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும். சென்னைக்கு விமான நிலையம் கண்டிப்பாக வேண்டும்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.