இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் நாளில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய கே.எல். ராகுல் 42 ரன்களில் அவுட்டாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சாய் சுதர்சன் டக் அவுட்டானார்.
இதனிடையே யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி வந்தனர். அதன்படி முதல் நாள் ஆட்டத்தில்யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இருவரும் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்து வர ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இன்று 2வது நாளில் சுப்மன் கில்லுடன் ரிஷப் பண்ட் இணைந்தார். இதில் கில் 147 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனிடையே ரிஷப் பண்ட் ஒருபுறம் அதிரடியாக விளையாடி 134 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்தவர்கள் வரிசையாக இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் 2வது நாளில் இந்திய அணி ஆல் அவுட்டாக 471 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் ஜோ டங்க், பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.