இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - புதிய சாதனைகளை குவித்த ரிஷப் பண்ட்!
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும், சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும் அடித்தனர்.
முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டான இந்திய அணி 471 ரன்களை குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் அடித்து ஆல்வுட்டானது. முன்னிலை வகித்து வரும் இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 349 / 6 என்ற கணக்கில் விளையாடி வருகிறது. இதில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137 ரன்களும் ரிஷப் பண்ட் 118 ரன்களும் அடித்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடித்துள்ள ரிஷப் பண்ட் புதிய சாதனைகளை குவித்துள்ளார். அதன்படி முதலில் இந்திய விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் தோனி அடித்த 6 சதங்களை பின்னுக்கு தள்ளி 8 சதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் ஆண்டி பிளவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார்.