பிரம்மோற்சவ விழாவிற்கு முறையாக அழைக்காததால் கோயிலை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த நளநாராயண பெருமாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவவிழா நடைபெறுவது வழக்கம். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் ஸ்ரீ ல ஸ்ரீ கட்டளை விசாரணை சாமிகளின் ஆலோசனைப்படி தேதி குறித்து முறைப்படி பத்திரிக்கை அச்சிட்டு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் பரம்பரை கிராமங்களான பூமங்கலம், பேட்டை, அத்திப்படுகை, கீழாவூர், காக்கமொழி ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்தது .
ஆனால் தற்பொழுது நடைமுறைக்கு மாறாக பத்திரிக்கைகளை அச்சிட்டு நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு இன்று பத்திரிகைகள் வழங்கப்பட்டதாகவும், கோயில் கட்டளை விசாரணை சுவாமி மற்றும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் பரம்பரை கிராமங்களுக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி ஐந்து கிராமங்களைச் சேர்ந்த முக்கியமான பெரியவர்கள் நளநாராயண பெருமாள் ஆலயத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிழவியது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பிரம்மோற்சவ கொடியேற்றத்திற்கு முன்னதாக இன்று இரவு நடைபெறவிருந்த வாஸ்துசாந்தி ஹோமம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து முன்னதாக மாவட்ட ஆட்சியரிடத்தில் 5 கிராம மக்கள் முறையிட்டதாகவும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் நாளை நடைபெறும் பிரம்மோற்சவ கொடியேற்றத்தினை நடத்த விடமாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.