'ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு' - சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் !
அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலம், இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. தொடர்ந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டார்லைனர் மூலமே இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால், ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவர்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக பூமிக்கு அப்பால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா மற்றும் பட்ச்சுக்கு மாற்றுவீரர்களாக அனுப்பப்படவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் விஞ்ஞானிகள் கோளாறு இருப்பதை கண்டுபிடித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்படுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படவில்லை, இருப்பினும், இன்று (மார்ச்.12) இரவு மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான முயற்சி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது