புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் - உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த குருசாமி - ஆதிலட்சுமி தம்பதியினருக்கு கவின் குமார் (17) மற்றும் தினேஷ் (15) என இரு மகன்கள் உள்ளனர். கவின் குமார், ரயில்வே பீடர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சமீபத்தில், கவின் குமார் போதைப்பொருள் பழக்கம் கொண்ட சக மாணவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி ஆசிரியர் அவரது தந்தையிடம் புகார் செய்துள்ளார். மேலும்
இது குறித்து பெற்றோரை பள்ளிகக்கு வரவழைத்த ஆசிரியர்கள் மாணவனின் நடவடிக்கை குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது பெற்றோர் முன்னிலையில் மாணவன் கவின்குமாரிடம் இது போன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவன் கவின் குமாரை தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிவுரை கூறியதாகவும் தீய பழக்கம் உள்ள மாணவர்களின் நட்பை துண்டிக்க கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மேலும் வீட்டில் இருந்த தாய் ஆதிலட்சுமியும் உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளர்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கவின்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துக்க நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பிய தாய் ஆதிலட்சுமி மகன் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தளவாய்புரம் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.