"தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்" - எச்.ராஜா பேட்டி!
புதுக்கோட்டையில் பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழல் ஊரல் போதை அரசாங்கம். இந்த அரசு தொடருமானால் அடுத்த தலைமுறை இருக்காது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் சிந்தடிக் ட்ரக் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. சிந்தடிக் ட்ரக்கை இதுவரை தமிழக காவல்துறை கைப்பற்றியுள்ளதா? மத்திய புலனாய்வு அமைப்புதான் இதனை கைப்பற்றி வருகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது ஆகாஷ். டாஸ்மாக் விவகாரத்தில் அறிவாலயத்தை அதகலப்படுத்த போவதும் ஆகாஷ் தான். அமலாக்கத் துறையின் செயல்பாடு சரிதான் என்று கோடைகால விடுமுறைக்கு பின்னர் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தின் தலைமை ஹாஜி உயிரிழப்பிற்கு பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதை தான் மைய புள்ளியாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அலுவலக உயர் அதிகாரிகள் ஆகியோரின் உறவினர்கள் குடும்பத்தினர் படிக்கும் பள்ளிகள் முன்பு தான் சிந்தடிக் ட்ரக் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 வருடங்களாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதல்வர் செல்லவில்லை இந்த வருடமாவது முதல்வர் கூட்டத்திற்கு சென்றதை நான் பாராட்டுகிறேன்.
எடப்பாடி பக்கத்தில் உள்ளதால் முதல்வர் எதற்காக டெல்லி சென்றுள்ளார் என்பது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதால் அவர் பேசுகிறார் நான் காரைக்குடியில் இருப்பதால் இந்த விஷயம் எனக்கு தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் துறைமுகம் வழியாக தமிழகத்திற்கு தான் அதிக அளவு போதை பொருள் வருகிறது. தமிழகம் தான் போதை பொருள விற்பனையில் மைய புள்ளியாக உள்ளது. அதனால் தான் அவ்வப்போது குஜராத் துறைமுகத்தில் உயர் ரக போதை பொருட்கள் கைப்பற்றப்படுகிறது.
நடிகர் விஜய் எதற்காக கட்சி தொடங்கியுள்ளார் என்பதை அவர் விளக்க வேண்டும். ஏனென்றால் அவர் கூட்டங்களில் தேச பக்தராக இருந்த வேலு நாச்சியார் படத்தையும் போட்டு உள்ளார். தேச துரோகியாக குற்றம் சாட்டப்படும் பெரியார் படத்தையும் போட்டுள்ளார். இவர் எந்த அரசியலை முன்னெடுத்து செல்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்.
அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் வந்துள்ளார். தற்போதும் அதே பாஜக எழுச்சியோடு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அவர் இருந்த போது பாஜக எவ்வாறு எழுச்சியாக இருந்ததோ அதேபோன்றுதான் தற்போது உள்ளது என்றார். தமிழகத்திலிருந்து தொழிற்சாலைகள் வெளியே செல்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த எச் ராஜா, தமிழக அரசு லஞ்சம் கேட்டால் எந்த தொழிற்சாலை தமிழகத்தில் இருக்கும் அதை முதலில் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.