“முதியோர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
“தமிழ்நாட்டில் வயதானவர்களை பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் அவர்களது பிள்ளைகளும், உறவினர்களும் தனியே விட்டுச் செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. சுகாதார குறைபாடுகளால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால் இந்த மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் முறையாக
அமைக்கப்படவில்லை.
ஆகவே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும், அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை என கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,“முதியோர் மையங்களை அமைப்பதற்கான நிதியைதான் மத்திய அரசு வழங்கும். இல்லம் அமைப்பது மாநில அரசின் பணியே” என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் பணிதானே? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, “மூத்த குடிமக்களை பாதுகாக்க அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே இந்த வழக்கில் மத்திய சமூக நலத்துறையின் முதன்மைச் செயலர், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் முதன்மை செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது. தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.