காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி!
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஞான ஏஞ்சல். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சாந்தன் இலங்கை செல்லலாம்! மத்திய அரசு அனுமதி வழங்கியது!
இதனிடையே, அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவர ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்து மாணவி ஞான ஏஞ்சல் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“பாசமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு கடந்த ஆண்டு தாங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தீர்கள். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டத்தை தொடங்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மதிய உணவு, புத்தகப்பை, புத்தகம், குறிப்பேடு அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் எல்லோரும் பயன் பெறுகிறார்கள்.
இதையடுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கினால் ஏழை மாணவர்கள் உணவு உண்பார்கள் என்று நான் தங்களுக்கு 27-8-2023 அன்று கடிதம் எழுதினேன். எனது கோரிக்கையை ஏற்று தாங்கள் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்குவதாக அறிவித்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு, எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்"
இவ்வாறு மாணவி ஞான ஏஞ்சல் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.