தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்…!
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு... தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை மீட்டெடுக்க கோரிக்கை வந்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ரயில்வே சுரங்க பாலங்கள் மழைநீர் தேங்கி உள்ளது. கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் மழை பெய்து உள்ளதால் கோவில்பட்டி நகரமே வெள்ளக்கடாக காட்சி அளிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி ஜெயலலிதா சிசேரியன் கல்லூரியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கி உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த மாணவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் பெற்றோர்கள் தவிப்பதாக ஒரு பெற்றோர் மூலம் தகவல் வந்துள்ளது. அவர்களது தொடர்பு எண் : 9965004507
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி இடையே உள்ள ரயில்வே கேட்டில் பணிபுரியும் மேகலா எனும் ரயில்வே பணியாளர் மழை வெள்ள நீரில் சிக்கிக் கொண்டுள்ளார். ரயில்வே கேட் கட்டிடத்தை முழுவதுமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கட்டட மேல் தளத்தில் உதவிக்காக காத்திருக்கிறார்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த லட்சப்பழம், மற்றும் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சின்னசாமி என்ற பெரியவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம், 1/115 மேலத்தெரு, ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.