தமிழ்நாடு அரசு கவனத்திற்கு... தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரநாயக்கந்தட்டு கிராமத்தில், 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தாலுக்கா வீரநாயக்கன்தட்டு கிராமத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஓர் அரசு பள்ளியில் 250 பேர் தஞ்சமடைந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு நாட்களாக உணவின்றி தவித்துவரும் நிலையில் சரியான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம், குரூசு கோயில் தெருவில் வசித்து வரும் மக்கள் நேற்று அதிகாலையில் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் நேற்று முதல் உணவு, குடிநீரின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா மாங்கொட்டாபுரம் கிராமத்தில் 50 பேர் மழை வெள்ளத்தினால், வீட்டு மாடியில் உள்ளார்கள். வெளியே வர வழி இல்லாமல் அவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் இருப்பு தீர்ந்து விட்டதால், வாகன எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் ஆங்காங்கே சாலைகள், தரைப்பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து சீரடைந்த பிறகே இயல்பு நிலை திரும்பும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.