"தமிழ்நாடு வென்றது ; வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு" - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இம்மனுவின் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் தெரிவித்ததாவது..
“ அரசியல் சாசன பிரிவு 200ன் படி ஆளுநருக்கு எந்த மாதிரியான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவர் பிரிவு 200ன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை வெகு விரைவாக பின்பற்ற வேண்டும்.
முழுமையான வீட்டோ" அல்லது "பாக்கெட் வீட்டோ" என்ற கருத்து அரசியலமைப்பில் இடம் பெறவில்லை. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் அது அவரது கடமை.
ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. பிரிவு 200 ன் கீழ் முழுமையான தன்னிச்சை அதிகாரம் அனுமதிக்கப்படவில்லை. சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பின்னர் மசோதாக்கள் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்க முடியாது.
இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட மசோதா முன்பே சமர்பிக்கப்பட்ட மசோதாவை விட வேறுபட்டால் மட்டுமே விதிவிலக்காக கருத முடியும் (குடியரசு தலைவருக்கு அனுப்ப ஒதுக்க முடியும்). மசொதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்தால் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்
மாநில அரசின் ஆலோசனைக்கு மாறாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நிறுத்தி வைத்தால், ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். *ஆனால் பொது விதியாக, ஆளுநர் ஒரு மாநில அரசின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும். Governor under the 1935 became unavailable on the implementation of the Constitution.
ஆளுநருக்குக் தனது விருப்ப உரிமையை செயல்படுத்த முடியாது அதற்கு அரசியலமைபு இடமளிக்கவில்லை. ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அது அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்.
10 மசோதாக்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியலமைப்பு 200ன் கீழ் ஆளுநரின் முடிவு என்பது நீநிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே. மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசு தலைவர் பரிசீலிக்க ஒதுக்குவது சட்டவிரோதமானது. மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது.
ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன இந்த விவகாரத்தில் பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது..
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. திமுகவின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடியது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்