’தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்’ - வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 5 தினங்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அனேக இடங்களிலும், வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அனேக இடங்களிலும் வட தமிழக பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 ஆம் தேதி புதுக்கோட்டை , ராமநாதபுரம் , தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
16 ஆம் தேதியன்று மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் கனமழையும் தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,சிவகங்கை, புதுக்கோட்டை ,ஆகிய பகுதிகளில் மிக கனமழையும் பெய்யும்.
17 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ,தென்காசி ,தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
18 ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரின இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
16,17 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிகடல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.