அமெரிக்க தடகளப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக காவலர்; சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
அமெரிக்காவில் நடைபெற்ற உலக காவல் துறையினருக்கான தடகளப் போட்டியில் (World Police and Fire Games) மூன்று பதக்கங்களை வென்ற சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜுக்கு, அவரது சொந்த ஊரான முத்துநாயக்கன்பட்டியில் கிராம மக்கள் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், தேவராஜ் போல்வால்ட் (Pole Vault) போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
மேலும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார்.
இதனை தொடர்ந்து பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய தேவராஜுக்கு, முத்துநாயக்கன்பட்டி கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேள தாளங்கள் முழங்க, சிறு மேடை அமைத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து கிராம மக்கள் அவருக்கு மாலைகள் அணிவித்தும், சால்வைகள் அணிவித்தும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் தேவராஜை ஏற்றி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வெற்றி தேவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழக காவல் துறைக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.