"தமிழ்நாடுதான் இந்தியாவின் என்ஜின்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜுன் 10) திறந்து வைத்தார். அப்போது அவர் மேடையில் பேசியதாவது,
"இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருக்கிறோம். தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் உதவி உள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு உள்ளது. சாலை மேம்பாடு, நீர் பாசனம் போன்ற திட்டங்களிலும் உலக வங்கி உதவி இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் சிறந்த முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.
we safe எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும். நகரமயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் என்ஜின்-ஆக தமிழ்நாடு விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.