"சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில் 35,956 பேருக்கு ரூ. 200.27 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.139 கோடி மதிப்பிலான கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஆறாவது அறிவிப்பாக, நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் கட்டப்படும். இலங்கைக் கடற்படையால் நம்முடைய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கச்சச்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக புதிய ஒப்பந்தத்தை இலங்கை அரசிடம் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கைக் கடற்படை கைது செய்யப்படுவதையும் விசைப்படகுகள் பறிமுதல் செய்வதையும் தடுக்க நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றார்.